Thursday 30 May 2013

உடையார் பாளையத்தில் தந்தை பெரியார்


முட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும்


அன்பார்ந்த தலைவர் குறுநில மன்னர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!
இந்த உடையார்பாளையம் என்னும் புராத ஊருக்கு இரண்டாம் தடவையாக வந்திருக்கிறேன். இந்த ஊர் குறுநில மன்னரை நான் இதுவரை பார்த்ததில்லை. இன்று இந்த ஊரையும் அரண்மனையையும் பார்த்து வேதனையடைந்தேன். மகிழ்ச்சியடையவில்லை. இந்த ஊர் மறுபடியும் பழைய நிலைக்கு வருமா என்றால் பயப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. சரித்திர சம்பந்தமான இந்த ஊரின் நிலை அவ்வளவு பரிதாபப்பட வேண்டியதாக உள்ளது.

ஜமீன்தார்கள் என்பவர்கள் கடன்பட்டு இருந்தார்களா? அவர்களுடைய சொத்து ஏலத்தில் போய்விட்டதா? இல்லை பின் ஏன் இந்த நிலை?
அப்படியிருந்தும்கூட இந்த ஜமீன்தார்கள் இருந்தால் நமக்கு இடையூறு என்று நினைத்து பார்ப்பன ஆட்சி இவர்களை ஒழித்தது காமராசர் போன்றவர்களைப் பற்றி ஏதேதோ சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை ஆள்பவர்கள் பார்ப்பனர்கள் தான். பார்ப்பனர்களின் நோக்கமென்ன? மற்ற மக்களைப் பூச்சிகளாக, மிருகங்களாக ஆக்கிவிட்டுத்தான் ஆளவேண்டுமென்பது தான் பார்ப்பனர் கைக்கு ஆட்சி வந்த உடனே 632 ராஜாக்களை ஒழித்தார்கள். இதை ஒரே வரியில் செய்தார்கள். புதுக்கோட்டை, திருவாங்கூர், கொச்சி, மைசூர், அய்தராபாத் ராஜாக்களை நமக்குத் தெரியும். அவர்களின் ஆட்சி அதிகாரம் யாவும் ஒழிக்கப்பட்டு சர்க்காரின் சம்பள ஆட்களாக ஆக்கப்பட்டார்கள். ஏன் இப்படிச் செய்தார்கள் என்றால் ராஜாக்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதார் சூத்திரர்கள்.

மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரன் ராசாவாக இருக்கக்கூடாது காந்தியிடம் வெள்ளையன் ராஜ்யத்தைக் கொடுத்தான். அவர் அதை பார்ப்பானிடம் கொடுத்தார். எனவே, மனுதர்மப்படி சூத்திரர்கள் சூட்சி ஒழிக்கப்பட்டது.
இதே மாதிரி சூத்திரன் ஆட்சி ஒழிக்கப்பட்டது தான் இராவணன் சூரபத்மன் இரணியன் முதலானவர்கள் கொல்லப்பட்ட கதைகள் எல்லாம். மனு தர்மத்திலேயே அசுரன், அரக்கன், கருப்பன் என்றால் சூத்திரன் என்று இருக்கிறது. எனவே, அவர்களைக் கொல்ல எடுக்கப்பட்ட பத்து அவதாரங்கள் பற்றிய கதைகள் தான் இராமாயணம் பாகவதம் முதலானவை. சிவன் அவதாரம் எடுத்தவைகூட சூத்திரன் ராட்சதன் ராஜாவாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
இன்று பாருங்களேன்! காமராசர் சூத்திரன். எனவே, அவர் ஆளக்கூடாது என்று அவரை ஒழிக்க பார்ப்பான் வேலை செய்கிறான். நாடார், நாயுடு, வன்னியர் முதலானவர்கள் இன்று தங்களை சத்திரியர் என்று சொல்லிக் கொள்வார்கள். அப்படி சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவர்களுக்கு சிறு மரியாதைகூட சட்டத்தில் கிடையாது. சூத்திரனுக்கு உள்ள மரியாதைதான் அவர்களுக்கும் உண்டு.

சேரன், சோழன், பாண்டியன் வெங்காயங்கள் என்பவர்கள் எல்லாம் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்தவர்களே! இன்னொரு வெட்கப்படவேண்டிய சேதி என்னவென்றால், பல பாண்டியர்கள் பார்ப்பானுக்குப் பெண்டாட்டியைக் கொடுத்தவர்கள் என்பதாகும்.
பக்தர்கள் என்பவர்களும் இப்படித்தான்.
தங்கள் இஷ்டம்போல அரசர்கள் ஆடினபடியினாலே பார்ப்பனர்கள் அப்போது கவலைப்படவில்லை. ஆனால், சென்ற 40 வருட காலத்தில் அரசர்களுக்குக் கொஞ்சம் அறிவு வந்தது. ஜமீன்தார்களுக்கும் புத்தி வந்தது. இருசாராரும் பார்ப்பானை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
உதாரணமாக, மைசூர் ராசாவையே எடுத்துக் கொள்ளலாம். அங்கே, இனிமேல் பார்ப்பான் அல்லாதவனுக்கே உத்யோகம் என்று தீர்மானமே போட்டார். அடுத்து திருவாங்கூர், திருவாங்கூர் ராசா பார்ப்பானுக்குப் பிறந்தால் தான் பட்டம் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அவனுக்கு உணர்ச்சி வந்தது. பார்ப்பான் ஆதிக்கத்தை குறைக்க ஆரம்பித்தான். மற்ற மற்ற ராஜாக்களும் இப்படி ஆரம்பித்தார்கள். இதனால் ராஜாக்கள் நமக்கு எதிரிகளாகி விட்டார்கள் என்று பார்ப்பான் கண்டான்.
முன்பெல்லாம் ராஜாக்கள் கோயில் கட்டினார்கள்; கோயில்களுக்கு மானியம் விட்டார்கள். உற்சவம், கலியாணம், பூசை என்று நடத்தினார்கள். அதற்காக சொத்துக்களை எழுதி வைத்தார்கள்.
பக்கத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனபோது அங்குள்ள கோயிலுக்கு 365 ஏக்கர் மானியம் இருக்கிறது என்றார்கள். எதற்காக என்றால், கோயில் பூசைக்கு ஒரு நாளைக்கு ஒரு ஏக்கராவாம். வைத்தீஸ்வரன் கோயில் என்பதற்கு 365 வேலி நிலம்; 1 நாளைக்கு 1 வேலி வீதம் பூசைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல் ஆவிடையார் கோயில் சாமிக்கு ஏராளமான சொத்த ஜகந்நாதத்திலும் அப்படித்தான். இப்படியிருந்தால்  பார்ப்பான்கள் கஷ்டமில்லாமல் இருக்கலாம்; தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்; சப்-இன்ஸ்பெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சூப்ரிண்டெண்ட் முன்சீஃபு, ஜட்ஜூ ஆகக் கொண்டு வரலாம். இதெல்லாம் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தது. நம்முடைய பிரச்சாரம் முயற்சி மற்ற மற்ற காரியங்களை எல்லாம் பார்ப்பானுக்கு இடைஞ்சலாயிற்று.
ராஜாக்களுக்குக் கடமை என்ன? என்றால் மனுநீதி தவறாது நடப்பவன். என்பதாக இருந்தது. இப்போது அது மாறிப்போயிற்று. ஆகவே, ராஜாக்களை ஒழிக்க பார்ப்பான் திட்டமிட்டான். அதேபோல், ஜமீன்தார்கள் நிலைமையும் ஆகிவிட்டது. அந்த ஜமீன்தார்களும் 30, 40 வருடகாலமாக விழித்துக் கொண்டார்கள்.
பார்ப்பானுக்கு எதிர்ப்பாக ஏற்பட்ட ஜஸ்டிஸ் கட்சி போன்ற இயக்கங்களுக்கு ராஜாக்களும், ஜமீன்தார்களும் உதவி வந்தார்கள்.
எனவே, இனி இவர்கள் துரோகி ஆகிவிட்டார்கள்: இவர்களை ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பான் திட்டம் போட்டான். அதற்கேற்ற மாதிரி துரோகியான காந்தியின் கையில் ராஜ்யம் வந்தது. அது பார்ப்பான் கையில் கிடைத்தது. உடனே ராஜாக்களையும், ஜமீன்தார்களையும் ஒழித்தார்கள்.
பெரிய சமஸ்தானங்களின் நிலைமை கலியாணத்துக்கு அடுத்த நாள் தாலி அறுத்த பெண்கள் நிலைமைமாதிரி இருக்கிறது. நான் வடநாட்டிலும் சில ராஜ்யங்களில் இந்த நிலையைப் பார்த்தேன்.
பார்ப்பான் அதோடு விடவில்லை. இப்போது நம்ம பணக்காரன்களை ஒழிக்கப் போகின்றார்கள். பிறகு, பணக்காரன், மிராசு இவர்களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பானுக்கு ஆதரவாக இருந்தார்கள். இப்போது அப்படி இல்லை. கலியாணம், கருமாதிக்குக்கூட பார்ப்பானைக் கூப்பிடுவதில்லை. எனவே, அவர்களை ஒழிக்கப் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள்.
நாங்கள் அலங்காரப் பேச்சுக்காரர்களல்ல. பெரிய காரியத்தையெல்லாம் சாதிக்க வேண்டுமென்று இருப்பவர்கள். எனவே, உண்மையைத்தான் பேசுவோம்.
பார்ப்பானுக்குப் பிழைக்க வழியுமில்லை. இப்போதே அவன் நினைக்கிறானே; இன்னும் ஒரு 10 வருடத்துக்கு இந்த ராமசாமி சாகாமல் இருந்தால் - காமராசரும் இன்னும் ஒரு 10 வருடத்துக்குப் பதவியிலே இருந்தால் நாம் பிழைக்க முடியாதே; களைக்கட்டு தூக்கவேணுமே; மண்வெட்டி கோடாரி எடுக்கணுமே என்று நினைக்கிறானே.
நாம் உழைக்கணும்; அவன் சாப்பிடனும் இதற்கு ஏற்றமாதிரி புராணம் எல்லாம் வைத்திருக்கிறான். இதை எல்லாம் நாம் எதிர்க்கிறோம்.
இப்போது பார்ப்பானுக்குப் பெரிய கேடு வந்து விட்டது. நாமெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டோம். நாம் ஒதுக்கி வைத்த பறையன், சக்கிலிகூட படிக்க ஆரம்பித்துவிட்டான். காமராசர் வந்த பிறகு சம்பளம் இல்லாமலும், சோறு போட்டும் படிப்புத் தருகிறார். இப்போது 100க்கு 15 அல்ல 20 பேர் நாம் படித்திருக்கிறோம். நம்ம பெண்கள் 100க்கு 3 பேர் படித்திருக்கிறார்கள்.
நாம் படித்தால் ஜாதித் தொழில் செய்ய மாட்டோம். நம்ம பெண்கள் எட்டாவது படித்து விட்டால் புல் விற்கப் போவாரா? நம்ம பையன் பத்தாவது படித்து விட்டால் சிரைக்க, வெளுக்க, கக்கூசு எடுக்கப் போவானா?
இப்போது நாம் படிக்க ஆரம்பித்ததனாலே எதிர்காலத்தில் பார்ப்பான் மண் வெட்டி தூக்கணும் பாப்பாத்திகள் களை வெட்ட வேண்டும் என்று தான் ஆகும். இதனால்தான் பார்ப்பான் எதிர்க்கிறான். இதெல்லாம் நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது அவர்களுக்கு.
பூமிதானம் என்று ஒரு பக்கம் கேட்டு வருகிறார்கள். எவனிடமோ வாங்கி வேறொருவனிடம் தருகிறார்கள். இது காங்கிரசு தியாகிக்கு மானியம் கொடுத்தது மாதிரி. இப்படியெல்லாம் செய்து நம்ம பணக்காரன்களை ஒழிக்க பார்ப்பான் திட்டம் போடுகிறான். இதனால் ஒரு பலன், நீதி கிடைக்குமென்றால் செய்யட்டும், நமக்கு ஆட்சேபனை இல்லை.
சமத்துவம் வேண்டும் என்று சொல்லி பரம்பரையாக ஆண்டு வந்த ராசாக்களை ஒழித்தான். சமத்துவம் வேண்டும் என்றால், பார்ப்பான் உயர்வைக் குறைக்க ஏதாவது செய்யணுமா, வேண்டாமா? பார்ப்பான் மடாதிபதியெல்லாம் இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கணும் என்கிறான். நம்மவர்கள் உரிமையை மட்டும் ஒழித்துக் கட்டிவிட்டார்கள். பார்ப்பான் மேலான சாதி என்கிற உரிமையை ஏன் இன்னும் கொடுத்துக் கொண்டு இருக்கணும்?
பாச்சையும் - பூச்சியும் மேய்கிற குழவிக்கல்கிட்டே பார்ப்பான் தான் இருக்க வேண்டுமாம்! வேறொருவன் இருக்கக்கூடாது என்கிறான். அவனுக்கெல்லாம் மரியாதை, உரிமை இருக்கிறபோது நம்மவன் உரிமையை ஏன் பறிக்கணும்?
கோயில்களைத் திறந்து விட்டு விட்டோம்; தீண்டாமை ஒழிந்து விட்டது என்கிறார்கள்! தீண்டப்படாதவர்கள் கோயிலில் எங்கே - எந்த அளவில் இருக்கிறார்கள்? சூத்திரன் போகிற இடம் வரைக்கும்தான் அவனும் போகலாம். அவ்வளவுதானே! பறையனைக் கொண்டு வந்து எங்களோடு சேர்த்தது சரி. நீயும் என்னோடு இறங்கி வந்து இருக்கணுமா? வேண்டாமா? - இப்படியெல்லாம் பழைய வழக்கம் சம்பிரதாயம் சாத்திரங்களை எதிர்த்துப் பேசி வருகிற எனக்கு ஆதரவு பெருகிதான் வருகிறது. நான் கேட்ட தொகை 40 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், இன்றைக்கு வந்திருக்கிறது. 1 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய். இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
ஏனென்றால், கோயிலுக்கு, கும்பாபிஷேகத்துக்கு, உற்சவத்துக்கு, பார்ப்பானுக்கு என்று கேட்டால் புண்ணியம் வரும் என்று எண்ணி தாராளமாக கொடுப்பார்கள்.
நான் கோயில்களை இடிக்க வேண்டும்; கடவுளை உடைக்க வேண்டும்; இந்த கடவுள்கள் அயோக்கியர்கள் என்று கூறுகிறேன்.
அப்படிப்பட்ட எனக்கு இந்தத் தொகை வசூலைப் பார்க்கும்போது ஆச்சரியந்தான். நான் ஏன் 40 அயிரம் கேட்டேன்? நமக்கும் கொடுப்பார்களா? என்று பயந்தே கேட்டேன். ஆனால், 122 ஆயிரம் வந்திருப்பதைப் பார்த்து அதிசயப்படுகிறேன்.
ஏனென்றால், மக்களுக்கு இவ்வளவு தூரம் புத்தி வந்திருக்கிறதே; விஷயங்களை உணர்ந்திருக்கிறார்களே; ஆத்திரமும் உணர்ச்சியும் பெற்று விட்டார்களே என்று பார்க்க ஆச்சரியப்படுகிறேன்; பாராட்டுகிறேன். இனி நாம் உணர்ச்சி உற்சாகத்தோடு பாடுபடலாம் என்று நான் கருதும்படியான அளவுக்கு இது ஒரு நல்ல அறிகுறி என்றே கருதுகிறேன்.
இந்த இயக்கம் தோன்றி இன்று 45 வருட காலமாகிறது. 1916லே இருந்து நல்ல அளவுக்கு இவ்வியக்கம் முன்னுக்கு வந்திருக்கிறது. இந்த மக்களிடையிலே இவ்வளவு தூரம் முன்னுக்கு வருவது சுலபமானதல்ல.
ஆரம்ப காலத்தில் நம் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களைப் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்லி பார்ப்பனர்கள் பிரசாரம் செய்தார்கள். பிறகு தலைமை நம்மிடமே வந்தது அதற்குப் பிறகு தமிழனுக்கு திராவிடனுக்கு உத்யோகம் வேண்டும் என்று பயப்படாமல் கேட்டு வருகிறோம்.
பார்ப்பான் தகுதி எங்களுக்கு இருக்கும்போது எங்கள் நாட்டு உத்யோகத்தை - எங்கள் வரிப்பணத்திலே நடக்கிற உத்யோகத்தை எங்களுக்குக் கொடு என்கிறோம்.
நம்முடைய மக்கள் கொடுக்கின்ற மொத்த வரியிலே 100இல் 1 பங்கு வரி கொடுப்பானா பார்ப்பான்?
பார்ப்பான்தான் இங்குவந்தவன் என்பதை ஒத்துக்கொள்கிறான். அவன்களுடைய தொல்லை கொடுமை விஷமத்தனம் நமது இயக்கத்துக்குப்பின் இன்றைய தினம் திரும்பி விட்டது. காமராசர் போன்றவர்கள் பதவிக்கு வந்தபிறகு நமக்கு 40, 50 சதவிகிதமாவது பதவி கொடுக்கிற அளவுக்கு வந்திருக்கிறோம்.
நாம் முன்னமே சொன்ன மாதிரி நானும் இன்னும் 10 வருடம் உயிரோடு இருந்து - காமராசரும் இன்னும் 10 வருடம் பதவியிலே இருந்தால் நம்முடைய விகிதாசாரம் உத்யோகம் கிடைக்கும் என்று நம்பலாம்.
இப்போது பார்ப்பான்கள் எல்லாம் உள்ளம் கொதிக்கின்றார்கள்; பயப்படுகின்றார்கள். இதன் விளைவுதான் இப்போது ராசகோபாலாச்சாரியார் சுதந்திராக் கட்சி ஆரம்பித்திருப்பதும்கூட!
நான் காங்கிரசை விட்டு ஏன் வந்தேன்? அது பார்ப்பான் ஆதிக்கங் கொண்ட காங்கிரசு; அதை ஒழிக்கணும் என்று வந்தேன். சமீபத்தில் காமராசரும் இதுபற்றிச் சொல்லி யிருக்கிறார்.
நான் காங்கிரசை ஒழிக்கணும் என்றேன். அப்போது பார்ப் பான் அதைக் காப்பாற்றணும் என்றான். இப்போது காங்கிரசு பார்ப்பான் துரோக ஸ்தாபனம், வருணாசிரம தர்மத்துக்கு விரோதமான ஸ்தாபனம் என்று பார்ப்பான் சொல்கிறான். எனவே, காங்கிரசை ஒழிக்க வேணும் என்கிறான். ராஜகோ பாலாச்சாரிக்கும் மற்ற பார்ப்பானுக்கும் இதுதான் வேலை.
காங்கிரசை ஒழிப்பதோடு மட்டுமில்லை, காமராசரை ஒழிக்கணும், ஜவஹர்லால் நேருவையும் ஒழிக்கணும் என்கிறார்கள். ஏன் இந்த நிலைமை?
நான் பழனியாண்டியின் பக்தன் மாதிரி காங்கிரசில் சேர்ந்தேன். பிறகு அதிலிருந்த ஊழலைக் கண்டதும் வெளி யேறினேன். காங்கிரசை ஒழிக்க வேண்டுமென்று நான் வெளியே வந்தேன். இப்போது பார்ப்பான் காங்கிரசு ஒழிய வேண்டும் என்கிறான்.
ராஜகோபாலாச்சாரி கட்சி ஜெயித்தால் அவர்தான் முதல் மந்திரி! டெல்லியில் அவர் கட்சி ஜெயித்தால் அவர்தான் பிரஸிடென்ட். அவர் பதவிக்கு வந்தால் உடனே, உனக்கு இத்தனைப் பள்ளிக் கூடம் எதற்கு? என்று ஒழித்துக் கட்டுவார். அப்பேர்ப்பட்ட இந்த சுதந்திராக் கட்சியிலே நம்முடைய தாலி அறுந்த முண்டங்களெல்லாம் போய்ச் சேருகிறார்கள்! உன் கட்சி ஜெயித்தால் மனுதர்மம் தானே வரும்? அப்போது நான் சூத்திரன்தானே? என்று எவனாவது கேட்கிறானா? இல்லை. அவனுக்குப் பதவி வேணும் என்கிறான்; அவ்வளவுதானே?
ராஜகோபாலாச்சாரிக்கு இப்போது ஒன்றும் வேண்டாம். ஒரு குட்டி மந்திரி வேலை கொடுத்தால்கூடப்போதும். அவரே சொல்கிறாரே, ஜனங்களுக்குத் தொண்டு செய்ய சின்ன வேலை என்ன? பெரிய வேலை என்ன? என்கிறாரே! அதன் அர்த்தம் நுழைந்து கொண்டால் எப்படியாவது தன் நோக்கப்படி ஆட்சியை நடத்தி விடலாம் என்பது தான். அவர் பதவிக்கு வந்தால் உடனே பள்ளிக்கூடங்களை மூடுவார். 1937-இல் அவர் மந்திரியாக இருந்தபோதே, தோழர் ஆனைமுத்து சொன்ன மாதிரி 2,200 பள்ளிக்கூடங்களை மூடினார். 1954-இல் மந்திரியாக இருந்தபோது 6,000 பள்ளிகளை மூடினார். ஜாதித் தொழில் செய்யணும் என்றார். அவரை ஒருவராலும் சட்ட சபைவாதிகளாலுங்கூட அசைக்க முடியவில்லையே! நாங்கள் தானே அசைத்தோம். எப்படி?
ஒரு மாதத்திலே குலக் கல்வித் திட்டத்தை நீக்கவில்லை யென்றால் கத்தியைப் பார்ப்பான் வயிற்றிலே சொருகுவோம். பார்ப்பான் வீட்டில் தீ வைப்போம் என்றேன். அவ்வளவுதான். உடனே ஓடினார். தன்னுடைய ஆளை விட்டு எதிர்த்தார். கடைசியில் காமராசர் வென்றார்.
காமராசர் வந்தவுடன், அவர் மூடிய 6,000 பள்ளிகளையும் திறந்து மேற்கொண்டும் 5,000 துவக்கப் பள்ளிகள், 500, 600 உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்தார். பெரிய உத்தியோகங்கள் எல்லாம் நம் ஆட்களுக்குக் கொடுத்தார்.
ராஜகோபாலாச்சாரி பதவியிலிருந்தபோது ஒரே ஒரு போலீஸ் சூப்ரிண்டென்ட் (டி.எஸ்.பி.) தான் நம்மவர் இருந்தார். இப்போது பாதிக்கு மேல் நம்மவர்கள் இருக்கிறார்கள். கமிஷனர், கலெக்டர், சீப் இஞ்சினியர் பலர் நம்மவர்கள் வந்திருக்கிறார்கள்.
எனவே, காங்கிரசு ஒழிய வேண்டுமென்று சொன்ன நான் காமராசர் இருந்தால்தான் காரியம் ஆகும் என்று கருதி காங்கிரசைத் தாங்க வேண்டியதாகப் போய்விட்டது. கண்ணீர்த் துளிகள், காங்கிரசு கண்ணீர்த் துளிகள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் இவ்வளவு பேரும் சேர்ந்து காமராசரை ஒழிக்கப் பார்க்கிறார்கள். அதற்காக காங்கிரசை ஒழிக்கிறேன்! என்பதாகப் பெரிதாகச் சொல்லி காமராசரையாவது ஒழிக்க முடியாதா என்று திட்டம் போடுகிறார்கள்.
பார்ப்பான் தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் வேஷம் போட்டுக் கொண்டு வருவான். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமது முயற்சியினால் நம் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. நம் பிள்ளைகள் டாக்டர், இஞ்சினீயர், முனிசீஃப் ஆக வருகிறார்கள்.
போலீஸ்காரனாகவும், ப்யூனாகவும் உள்ள நம்மவர்களும், வண்ணார், நாவிதர் முதலானவர்களும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். ஏன்? இனி ஜாதித் தொழிலையே செய்வதென்பது கூடாது; ஏதாவது உத்தியோகம் பார்க்கணும் என்றுதான்!
எல்லோரும் படித்து விட்டால் யார் கக்கூசு எடுப்பது? என்று பார்ப்பான் கேட்பான்.
இத்தனை நாளாக கக்கூசு எடுக்காதவன் இனி எடுக்கட்டுமே! என்று நம் மக்கள் சொல்ல வேண்டும்.
சில வேடதாரிகள் அரிசி விலையைக் குறைக்கிறோம்; புளி விலையைக் குறைக்கிறோம் என்று புளுகுவார்கள், காமராசராக இவர்கள் ஆனாலும் முடியாது. எப்படியாவது பதவிக்கு வரணும் என்பதே இவர்கள் நோக்கம். இவர்கள் ரயில்வே பிளாட்ஃபாரத்திலே ஆரஞ்சுப்பழம் விற்கிற வியாபாரிகளைப் போல.
உங்களிடம் ஓட்டுக் கேட்கிறவன் அந்த விலையைக் குறைக்கிறேன்; அப்படி இப்படி என்று புளுகுவான். அந்த நிலைமை உண்டானதனாலேதான் அது அப்படி விற்கப்படுகிறது.
இதை மறைத்துவிட்டு இந்த வேஷக் காரர்கள் எல்லாம் தபால் சிப்பந்திகளிடம் போய் சம்பளம் அதிகம் கேள் என்பார்கள். பிறகு அய்யோ கார்டு விலை ஏறி விட்டதே! என்று மக்களிடம் போய்ச் சொல்வார்கள்.
அடுத்து ஓட்டு வாங்க வருகிற போது, இப்போது மட்டும் ஓட்டுக் கொடுங்கள். இனி நான் விலை குறைக்கிறேன் என்பான். இப்படியெல்லாம் பித்தலாட்டம் பண்ணி, பார்ப்பான் காலைக் கழுவிக் குடித்தாவது பதவிக்குப் போகணும் என்பவர்கள் தான் இந்த வேஷக்காரர்கள்.
யாரும் செய்ய முடியாத வேலையை நாங்கள் செய்கிறோம். வெளியே கிளம்பினவனெல்லாம் மகான், ரிஷி, நாயன்மார், ஆழ்வார், சாமி என்பவனெல்லாம் மனிதன் ஏன் ஏழை? மனிதன் ஏன் முட்டாள்? மனிதன் உழைத்தும் ஏன் பட்டினி? என்று சிந்தித்தானா?
யார் பட்டினி? ஜாதியினால் கீழ் மகனாக இருக்கின்றவன் தானே? யார் படிக்கவில்லை? ஜாதியினால் கீழ் மகன் என்பவன்தானே?
ஊரெல்லாம் பஞ்சம் வந்து நம்மவன் கொட்டாங்குச்சியிலே கஞ்சி வாங்கிக் குடித்தபோது பார்ப்பான் தலைவாழை இலையிலே நெய் போட்டுத்தானே பச்சரிசி சாப்பிட்டான்!
நமது பாட்டாளிகளுக்கு கோவணம்தான் உடுப்பு! பார்ப்பானுக்குப் பன்னிரண்டும், ஆறும்! அதாவது, அவன் கீழ்ப்பாய்ச்சிக் கட்டுகிறான். பாப்பாத்தி 18 முழம் சேலையைக் கீழ்ப்பாய்ச்சிக்  கட்டுகிறாள். நம்ம பொம்பள்ளை 10 முழத்தை இழுத்துக் கட்டிக் கொள்கிறாள்.
இந்த வித்தியாசங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா? இதை மாற்ற வேணும் என்று கஷ்டப்படணும். எதற்காக இந்த ஜாதி? ஜாதியினால் என்ன நாம் முன்னுக்கு வந்தோம்?

நாம் உழவு செய்யணும். நெசவு நெய்யணும். அப்படியும் நாம் கீழ்ஜாதி என்கிறானே? இப்படிச் சொல்கிற அவன் நம்ம நாட்டிலேதானே உலவு கிறான்?
உழைக்கிறவனைக் கீழ்ஜாதி என்றால் வெள்ளைக் காரன் சுட்டுவிடுவானே!
துலுக்கன் நாட்டிலே போய் இப்படி இவன் சொன்னால் இவன் தலையைக் கீழே உருள விடுவான். வெள்ளைக்காரன் நாட்டில் இவனை சுட்டுப் போடுவான். இந்த மானங்கெட்ட நாட்டிலேதான், எதுக்கு இந்தப் பார்ப்பான்? என்று யாவரும் யோசிப்பதே இல்லை.
நெசவு நெய்கிறவன் இல்லையெனில் நாம் அம்மணமாக இருக்கணும், உழுகிறவன் இல்லையென்றால் நமக்குச் சோறு கிடைக்காது. பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன கிடைக்காது? இன்னமும் ஏன் அவன் பிராமணனான இருக்கணும்?

இங்கே தெருவுக்கு ஒரு கோயில் பார்த்தேன். கோயிலினால் ஒரு தூசி அளவு லாபம் மனிதனுக்கு உண்டா? பார்ப்பானுக் குத்தானே லாபம்! நீங்கள் அறிவைக் கொண்டு இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?
இப்படிச் சொன்னால் இது பிராமண துவேஷம், ஜாதி வெறுப்பு என்று சொல்வான். கொசு கடிக்கிறது என்றால், கொசுவலை கட்டிக் கொள்ள வேண்டியதுதானே! அப்படிச் செய்தால் நாம் கொசுத் துரோகியா?
மனிதத் தன்மை, அறிவு, ஆற்றல் எதற்காக இருக்கிறது? அவற்றை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும். வெள்ளைக்காரன் 200 வருடம் ஆண்டான். இவன் வந்து 12 வருடம் ஆச்சு. இன்னமும் நம்மில் 100-க்கு 80 பேருக்கு மேல் தற்குறி என்றால் ஏன் நாம் இப்படி இருக்கணும்?
ஓர் ஆயிரம் பேர் போலீசு, பியூன்களை எடுத்துக் கொண் டால், அதிலே ஒரு பார்ப்பனனாவது இருக்கிறானா? ஆனால், கோவிலில் மணி அடிக்கிற பசங்க அத்தனை பேரும் பார்ப் பான்தானே? ஏன் இது? மணி அடிக்கிற வேலை உழைக்காத வேலை - அதனால்தான்!
சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கு ரயில்வே உதவி மந்திரி சாமி கும்பிடப் போனார். அங்கே இருந்த பார்ப்பான் சாம்பலை அள்ளி மந்திரி மூஞ்சியிலே எறிந்தான். இன்னொரு மந்திரி கிட்டே இதைச் சொன்னால், அது அப்படித் தான்; நீ ஏன் அங்கே போனாய்? என்று கேட்கிறார். ஏன்? நாம் அறிவு பெறவில்லை என்பதால்தான்!

அரசர்களையும், ஜமீன்தார்களையும் ஒழித்தார்களே, கோயில்கள், மடங்கள் இவற்றுக்கு இருக்கிற சொத்துக்களை ஏன் ஒழிக்கவில்லை? திருப்பதிக்கு ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் வருமானம் வருகிறதே, அதை ஏன் ஒழிக்கவில்லை? பார்ப்பான்கிட்டே ஏன் போகவில்லை?
நான் படித்தவன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. நம்முடைய காட்டுமிராண்டித்தனம் ஒழியணும். கோவிலில் இருக்கிற குழவிக் கல்லை நாம் ஏன் கும்பிடணும். வெள்ளைக்காரன் 100 கோடி பேர் இருக்கிறான். துலுக்கன் 60, 70 கோடி பேர் இருக்கிறான். எவனாவது குழவிக் கல்லைக் கும்பிடுகிறானா? உனக்கு ஏதாவது வேணும் என்றால், அதற்காக கல்லை ஏன் கும்பிட வேண்டும்?

பார்ப்பான், கல்லைக் கும்பிடடா என்றால் காசு கொடுத்து கும்பிடுகிறாய். சுண்ணாம்பு அரைத்து, கல்லடித்து, நிலம் எழுதி வைத்து, கோவில் கட்டினது நம்முடைய பெண்டு பிள்ளைகள். கும்பாபிஷேகம் ஆனவுடனே ஜமீன்தார் என்றாலும் வெளியில் இருந்து கும்பிடு என்கிறானே! இந்தச் சாமிக்கு என்ன சக்தி இருக்கிறது? தன் தாலி திருடு போவதே அந்த சாமிக்குத் தெரிய மாட்டேங்குது! தன் பெண்டாட்டி தாலியும், சேலையும் திருடு போவதே ஆண்பிள்ளை சாமிக்குத் தெரியவில்லை. அது நம்மை எப்படிக் காப்பாற்றும்? சிக்கி முக்கிக் கல் காலத்திலே இருந்து மின்சார விளக்கு எரிகிற காலத்துக்கு நாம் வந்துவிட்டோம். இன்னமும் குழவிக் கல்லில் முட்டிக் கொள்வது எதற்கு?
சாமி இல்லை! என்று சொல்லும்படியான அளவுக்கு நீங்கள் தகுதியானவர்களல்ல; அதற்கு ஒருவன் நல்ல பகுத்தறிவு வாதியாக வேண்டும்.

சாமி இருக்கின்றது என்று ஒரு முட்டாள்கூட சொல்லி விடுவான். பேய், பிசாசு இருக்கிறது என்கிற முட்டாள்கிட்டே போய் சாமி இல்லை என்று சொல்லுவது ரொம்ப கஷ்டம். அப்படிச் சொல்வதற்கு நல்ல அறிவு வேண்டும்.
மகம்மதியன், கிறித்தவன் எல்லாம் உருவமே இல்லாமல், கண்ணுக்குத் தெரியாமல் ஒன்றும் வேண்டாத ஒருவர் இருக்கிறார் என்கிறானே, அது மாதிரி ஒன்றையாவது வைத்துக் கொண்டு நாசமாய்ப் போயேன். அவனுடைய கடவுள் சாகிறதுமில்லை. பிறக்கிறது மில்லை என்கிறான். நீ கிருஷ்ணன் பிறந்தான்: செத்தான் என்று நாள் கொண்டாடுகிறாயே! இராமன் பிறந்தான்: செத்தான் என்கிறானே, அவன் சாமியா? உனக்கு எதற்காக லட்சக் கணக்கான சாமிகள்? ஏன் ஒரு தலை, ஆறு தலை, பத்துத்தலை, பன்னிரெண்டு கை சாமியை நீ வைக்கிறாய்?

இந்த மாதிரி உருவமுள்ள சாமியினாலே ஆகிறது என்ன? அந்தச் சாமிக்குச் சொத்து, நகை, பெண்டாட்டி எல்லாம் எதற்கு? அந்தச் சாமிக்கு ஆறு வேளை படைக்கிறாயே, ஒரு பருக்கையாவது சாமி தின்கிறதா? பார்ப்பான்தானே தின்கிறான்?
எந்தச் சாமியாவது ஒழுக்கமாக இருக்கிறதா? ஒரு சாமிக்கு 60 ஆயிரம் பெண்டாட்டி எதற்கு?
சாமி கருணையே வடிவானது என்கிறாய். ஆனால், எல்லா சாமிக்கும் ஈட்டி, சூலாயுதம், வேலாயுதம், தண்டாயுதம் கொடுத்திருக்கிறாயே எதற்காக? திருட்டுப் பசங்ககிட்டே இருக்க வேண்டிய ஆயுதமெல்லாம் சாமிக்கு எதற்காக? இதை நம்புகிற முட்டாள் உங்களைத்தவிர, உலகத்திலே வேறு எங்கே இருக்கிறான்? எப்போது நீங்கள் திருந்துவது?
ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
இனிமேல் கோவிலுக்குப் போவதில்லை;
ஆயிரம் சாமி இருக்கிறது என்று நினைக்கிறதில்லை;
பார்ப்பானைப் பிராமணன் என்று சொல்கிறதில்லை;
பார்ப்பான் கடைக்குப் போவதில்லை;
பார்ப்பானோடு உறவு வைத்துக் கொள்வதில்லை
என்பதாக நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை என்று நான் சொல்லவில்லை; நான் சொல்லுவதை அப்படியே நம்புங்கள் என்றும் சொல்லவில்லை.
இனிமேல் வருவது இங்கே இருக்கிற குழந்தைகள் காலம். நம்முடைய மானங் கெட்டதனம் நம்மோடு தொலையட்டும். நம்முடைய சந்ததி நன்றாக இருக்கட்டும்! என்று சொல்லி நம்ம பெண்டு, பிள்ளைகளைப் பக்குவம் பண்ணுங்கள். அறிவுள்ள மக்களாக ஆகுங்கள்.

எங்களுடைய பிழைப்புக்காக நாங்கள் யாரும் இதைச்செய்ய வரவில்லை. ஆதலால்தான் எங்களால் ஆனதைச் செய்கிறோம். நீங்கள் இந்த சமயத்தை இழந்து விடாமல் திருத்த முயற்சிக்க வேண்டும் என்பதாகக் கூறி முடித்தார்.

(28.1.1960 அன்று உடையார் பாளையத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை விடுதலை 8, 9.2.1960)

No comments:

Post a Comment